ரஷ்யா மற்றும் ஜப்பானை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை:
ஹவாய் தீவுகளில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா கடற்கரைக்கும் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் தனது பதிவில், "மக்கள் அனைவரும் நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனாவின் ஷாங்காய் உள்ளடக்கிய கடற்கரை பகுதியிலும் சுனாமி தாக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம் தனது அறிவிப்பில், கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற வேண்டும் என்றும், யாரும் கடலுக்குள் அல்லது கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், அமெரிக்க நேரப்படி இன்று இரவு பல பெரிய அலைகள் தாக்கக்கூடும் என்று கணித்துள்ளது.
ஹவாய் துறைமுகங்களில் இருந்து வெளியேற்றம்:
ஹவாயில் உள்ள வணிகத் துறைமுகங்களில் இருந்து கப்பல்களை உடனடியாக வெளியேற்றுமாறு அமெரிக்க கடலோரக் காவல்படையின் தளபதி அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.