Publish Date: Wed, 05 Mar 2025 (11:41 IST)
Updated Date: Wed, 05 Mar 2025 (11:43 IST)
அமெரிக்க கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ போராட்டம் செய்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது சமூக வலைதளத்தில், "அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. கல்லூரி நிர்வாகம் இது போன்ற போராட்டங்களை அனுமதிக்கவும் கூடாது. அவ்வாறு போராட்டங்களை அனுமதித்தால், அந்த கல்வி நிறுவனங்களுக்கு அரசிடம் இருந்து செல்லும் நிதியுதவி நிறுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அவர்களின் சொந்த நாட்டுக்கு நிரந்தரமாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் போராடினால், அவர்கள் நிரந்தரமாக கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். மேலும், குற்றத்தின் தன்மைக்கேற்ப, அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் போராடினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.