ஆப்பிரிக்காவில் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது ட்ரான்ஸ்பார்மர் வெடித்ததில் பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தலைநகர் பாங்கு. அங்குள்ள உயர்நிலை பள்ளியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி ஆண்டு தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது.
நேற்று பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பள்ளி அருகே இருந்த ட்ரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பள்ளி கட்டிடம் தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 29 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள்.
மேலும் தீ விபத்து காரணமாக மாணவர்கள் அலறியடித்து ஓடியதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த சோக சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ள அந்நாட்டு அதிபர், 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Edit by Prasanth.K