Publish Date: Fri, 20 Sep 2024 (08:05 IST)
Updated Date: Fri, 20 Sep 2024 (08:07 IST)
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டு வரும் இலங்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியால் சிரமங்களை தாண்டி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால், அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நாளை அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. கடைசி நாளில், அனைத்து அதிபர் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா களம் போட்டியிடுகிறார். மேலும் இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.இந்த மூவருக்கும் இடையில் கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது
அதுமட்டுமின்றி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நால்வரில் யார் அடுத்த இலங்கை அதிபர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.