Publish Date: Tue, 17 Sep 2024 (07:20 IST)
Updated Date: Tue, 17 Sep 2024 (07:23 IST)
இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் அகதிகளா? கொள்ளையர்களா? அல்லது மீனவர்களா? என விசாரணை நடந்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நடுக்கடலில் இந்திய எல்லையை தாண்டி நுழைந்த மூவரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
தொண்டியிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை கடல் பகுதியிலிருந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த ஒரு பைபர் படகு அவர்களின் கவனத்தை ஈர்த்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த படகினை சுற்றி வளைத்தனர்.
படகில் இருந்த மூவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. அவர்களை உடனடியாக கைது செய்து, ஞாயிறு இரவு மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது.
இந்த மூவரின் அடையாளம் குறித்து விசாரணை செய்யப்பட்டதாகவும், அவர்கள் அகதிகளாக உள்ளார்களா, மீனவர்களா, அல்லது கடத்தல்காரர்களா? என்பதை உறுதிப்படுத்த விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.