இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், ஈரானின் தொடர் தாக்குதலை அடுத்து ஈரான் உச்சத்தலைவர் அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஈரான் தனது ஏவுகணைகளை டெல் அவிவ் நகரத்தின் மீது ஏவியது. இதனால் இரு நாடுகள் இடையே பெரும் போர் பதற்றம் எழுந்தது. அதை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடியாக டெஹ்ரானை தாக்கியது. இதனால் ஈரானும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேலை தாக்கியது.
இவ்வாறாக இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ள நிலையில் அரசியல் தலைவர்களும் மாறி மாறி எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஏவிய பிறகு சூளுரைத்த ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அல் கமேனி “இப்போது போர் தொடங்கிவிட்டது. ஜியோனிஸ்டுகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை” என கூறினார்.
இந்நிலையில் அவரை எச்சரிக்கும் விதமாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் பேசியுள்ளார். ராய்ட்டர்ஸ்க்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் “ஈரானிய சர்வாதிகாரியை தொடர்ந்து போர்க்குற்றங்களைச் செய்வதற்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கும் எதிராக நான் எச்சரிக்கிறேன். ஈரானுக்கு அண்டை நாடான ஒரு நாடு இஸ்ரேல் அரசுக்கு எதிராக இதே பாதையைத் தேர்ந்தெடுத்தபோது, அதன் சர்வாதிகாரியின் தலைவிதி என்ன ஆனது என்பதை அவர் நினைவில் கொள்வது நல்லது” என்று எச்சரித்துள்ளார்.
அவர் ஈராக் முன்னாள் அதிபர் சதான் உசைனைதான் குறிப்பிட்டு எச்சரித்துள்ளார் என கூறப்படுகிறது. 2003 வரை ஈராக் அதிபராக இருந்த சதாம் உசைன் சர்வதிகார போக்குடன் செயல்பட்ட நிலையில், விஷவாயு, ரசாயன ஆயுதங்களை தயாரித்தது, எதிர்ப்பவர்களை கும்பல் கும்பலாக கொன்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளால், அவர் பிடிக்கப்பட்டு சர்வதேச நீதி ஆணையத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இதே நிலையில் அலி கமேனிக்கும் ஏற்படும் என்பதைதான் மறைமுகமாக கட்ஸ் கூறுவதாக தெரிகிறது.
Edit by Prasanth.K