Publish Date: Sun, 10 Sep 2023 (11:19 IST)
Updated Date: Sun, 10 Sep 2023 (11:37 IST)
மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இதுவரை 2000 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொரோக்கோ. இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுநடுக்கத்தால் பலர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலநடுக்கம் பற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நேற்று முன்தினம் 11:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், அதன்பின்னர், மீண்டும் 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.
மொரோக்கோ தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவானதாக கூறியது.
இந்த நில நடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மொரொக்கோ நாட்டை உலுக்கிய நில நடுக்கத்தால் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.