2023 அக்டோபர் மாதம், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதன் பின்னணியில், இஸ்ரேல் காசா மீது பெரும் போரை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காசா போர் நடைபெறும் காலத்தில், இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவைகளை வழங்கியதை மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பணயக்கைதிகளை கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் இந்த தொழில்நுட்பம் பயன்பட்டதாகவும் கூறியுள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு AI பயன்படுத்தப்படவில்லை என மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல ஊழியர்கள், இஸ்ரேலுக்கு சிலவகை தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல தொழில்நுட்ப நிறுவனங்கள் போர் தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவது பற்றி மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.