Publish Date: Wed, 07 Oct 2020 (11:14 IST)
Updated Date: Wed, 07 Oct 2020 (11:16 IST)
மெக்ஸிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் இடையே நடந்த மோதலில் 12 பேரை கொன்று கடிதம் எழுதி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க பிராந்தியமான மெக்ஸிகோவில் போதை பொருள் கடத்தல்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு போதை பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வரும் நிலையில் பல சமயங்களில் அவர்களுக்குள்ளாக கேங் வார்களும் நடைபெறுகின்றன.
மெக்ஸிகோவில் வடக்கு பிராந்தியமான சான் லூயி பொடேசி என்ற பகுதியில் இரண்டு வேன்கள் கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இரண்டு வேன்களில் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 12 பேர் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களது பிரேதங்களை பறிமுதல் செய்த போலீஸார் அந்த வேன் ஒன்றில் ஒரு சிறு காகிதத்தை கண்டெடுத்துள்ளனர். அதில் தொழில் போட்டி காரணமாக இவர்களை கொன்று விட்டதாக ஒரு கும்பல் எழுதி வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மெக்ஸிகோவில் போதை மாஃபியாக்களை ஒழிக்க வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.