Publish Date: Mon, 16 Sep 2024 (16:47 IST)
Updated Date: Mon, 16 Sep 2024 (16:48 IST)
மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்கள் பகிரும் பதிவுகளை பயன்படுத்தி, தங்களது ஏஐ மாடல்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியை அடுத்த சில மாதங்களில் பிரிட்டன் நாட்டில் ஆரம்பிக்க உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.
முந்தைய காலங்களில், பிரிட்டனில் உள்ள டிஜிட்டல் தள ஒழுங்குமுறைகளின் சிக்கல்களைச் சந்தித்து, இந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு பிறகும், மெட்டா இந்த திட்டத்தை தொடர உறுதியாக இருப்பதைக் காட்டும் விதமாக தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெட்டாவின் புதிய திட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பகிரும் புகைப்படங்கள், விளக்கங்கள் (captions), மற்றும் கருத்துக்களை (comments) பயன்படுத்தி, தங்களது ஜெனரேடிவ் ஏஐ மாடலுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. இதுகுறித்த தகவல்கள் விரைவில் பிரிட்டன் பயனர்களுக்கு இன்அப் அறிவிப்பாக தெரிவிக்கப்படும்.
மேலும் பிரிட்டனின் தகவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெறுவது தொடர்பான விவரங்களை மெட்டா சமர்ப்பிக்க உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பயனர்களின் பதிவுகளை பயன்படுத்தி ஏஐ மாடல்களை பயிற்றுவிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில், 'மெட்டா ஏஐ' சாட்பாட் மெட்டா நிறுவனத்தால் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.