இந்தியா - கனடா இடையேயான உறவு நிலையில் கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்படுத்திய பாதிப்பை அமெரிக்காவின் பெண்டகன் முன்னாள் அதிகாரி மைக்கெல் ரூபின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கனடா பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் சீக்கிய மக்களின் ஆதரவை பெறுவதற்காக காலிஸ்தானி அமைப்புகளுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கருத்துகளை வெளிப்படுத்தியதும், பிளவுகளை ஏற்படுத்தியதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ட்ரூடோவின் சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மார்க் கார்னி பிரதமராக ஆக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபமாக இந்தியா - கனடா உறவை திருப்தி செய்ய மார்க் கார்னி மேற்கொள்ளும் முயற்சிகள் நிறைவை தருவதாக பெண்டகன் முன்னாள் அதிகாரி மைக்கெல் ரூபின் தெரிவித்துள்ளார். ட்ரூடோவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர் “இந்தியா நீங்கள் உதைத்து விளையாடும் கால்பந்து அல்ல. அது ஒரு நட்பு நாடு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
மார்க் கார்னியின் வெளியுறவு செயல்பாடுகளை புகழ்ந்துள்ள ரூபின், ஜி7 மாநாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை வரவேற்றுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகள், கனடாவின் செயல்பாடுகள் அல்ல என்றும், கனடா என்றுமே இந்தியாவின் நட்பு நாடுதான் என்பதை கார்னியின் செயல்பாடுகள் உணர்த்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ட்ரூடோ ஆட்சியின்போது கனடா - அமெரிக்கா இடையிலும் பெரும் மோதல் நிகழ்ந்து வந்த நிலையில் மார்க் கார்னியின் வருகைக்கு பிறகு சமாதான பேச்சுவார்த்தைகள் சுமூக நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K