சமீபமாக தனது ஊழியர்களை பெருமளவில் பணி நீக்கம் செய்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் தொழில்நுட்ப துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வேலைவாய்ப்புகள் கேள்விக்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏஐயின் ஆட்டோமேஷன் செயல்பாடுகளால் முன்னணி ஐடி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த பணிநீக்க அதிரடியில் பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இறங்கியுள்ளது.
கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. மைக்ரோசாஃப்ட்டில் நடந்து வரும் ஏஐ ஆட்டோமேஷனால் மட்டுமல்லாமல், பல்வேறு காரணங்களால் இந்த பணி நீக்கம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொல்லாமல் திடீரென 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்.
அதில் மைக்ரோசாஃப்ட் பணியாளர் ஒருவர் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றுக் கொண்டிருந்தபோது, அவருக்கு பணிநீக்க மெயில் வந்ததாக லிங்க்ட் இன் தளத்தில் கூறி புலம்பியுள்ளார். மைக்ரோசாஃப்டின் இந்த முடிவுகளால் மற்ற பணியாளர்கள் வேலை பயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K