அமெரிக்கா போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டவுடன் மோடி சரண்டர் ஆகிவிட்டார் என்று ராகுல் காந்தி பேசிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலையீடு காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போரை இந்தியா நிறுத்திவிட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி சரண் அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்திரா காந்தி மட்டும் உயிரோடு இருந்திருந்தால், பாகிஸ்தானை இரண்டாக பிளந்து இருப்பார்" என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் ராகுல் காந்தியின் விமர்சனத்தை மறுத்துள்ளார்.
"போரினை நிறுத்துமாறு இந்தியாவை யாரும் வற்புறுத்தவில்லை. நாங்களே பாகிஸ்தானிடம் கூறினோம், பாகிஸ்தான் போரை நிறுத்தினால் நாங்களும் நிறுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தோம். பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு, போரை நிறுத்தியது. எனவே, இந்த போர் நிறுத்தத்திற்கு மூன்றாவது தரப்பின் தலையீடு இல்லை. குறிப்பாக, அமெரிக்காவின் தலையீடு இல்லை" என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, டிரம்பிடம் மோடி சரண் அடைந்துவிட்டார் என்று விமர்சனம் செய்த நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி., அமெரிக்காவில் இருந்தபடியே இந்த கருத்தை மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.