Publish Date: Thu, 14 May 2020 (07:05 IST)
Updated Date: Thu, 14 May 2020 (07:07 IST)
கொரோனா வைரஸ் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலகிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான் என்பது கடந்த சில வாரங்களாகவே நிரூபிக்கப்பட்டு வருகிறது
அமெரிக்காவில் நேற்று மட்டும் 21 ஆயிரத்து 712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும். அது மட்டுமின்றி அந்நாட்டில் ஒரே நாளில் ஆயிரத்து 772 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருவதும் வல்லரசு நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் அமெரிக்காவை அடுத்து மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது இந்நாட்டில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 11,555 பேருக்கு கொரொனா பாதிப்பு அடைந்துள்ளதாகவும், 754 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 44,27,900ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 298,077ஆக உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சி தகவல் ஆகும். இருப்பினும் உலகம் முழுவதும் 1,657,831 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பது மட்டும் ஒரு ஆறுதலாக தகவல் ஆகும்