Publish Date: Tue, 19 May 2020 (08:45 IST)
Updated Date: Tue, 19 May 2020 (08:44 IST)
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்கியுள்ளதால் பல நாடுகள் சிக்கலை சந்தித்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த 5 மாத காலமாக மொத்த உலகையுமே புரட்டி போட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்திய நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. ஒருபக்கம் கொரோனா பரவாமல் தடுக்கவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கவும், மறுபுறம் மருந்து கண்டுபிடிக்கவும், பொருளாதார நிலையை சீர்செய்யவும் என பல்வேறு சிக்கல்களை ஒரே சமயத்தில் பல நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
ஆனாலும் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதிப்பு 48.40 லட்சமாக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் 3,20,130 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 19,07,371 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,50,294 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 91,981 ஆகவும் உள்ளது.