Publish Date: Mon, 04 May 2020 (10:05 IST)
Updated Date: Mon, 04 May 2020 (10:07 IST)
உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாக்குதலால் மக்கள் பலர் பலியாகி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் கிளிகளுக்கு புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவியுள்ள கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாமல் அமெரிக்காவில் சிங்கம், புலிகளையும் தாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்போன் நகரத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த லாரிக்கீட் என்னும் இன கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து க்ரிஃபித் பல்கலைகழக ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் கிளிகளுக்கு புதிய வகை வைரஸ் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.
கால்களில் தொடங்கும் இந்த வைரஸால் ஒரு இடத்தில் நிலையாக நிற்க முடியாமல் தொடர்ந்து பறக்கும் கிளிகள் வானத்திலிருந்து விழுந்து இறந்து போகின்றன என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் கிளிகள் ஒன்றை ஒன்று தாக்கி கொள்ளும்போது அவைகளுக்குள் பரவுகிறது மட்டுமல்லாமல் மெல்ல பரவி நுரையீரலையும் பாதிக்கிறது.
இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்குமா என்பது குறித்து ஆய்வாளர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் மனிதர்களை பலி கொண்டு வரும் நிலையில், கிளிகளிடையே பரவியுள்ள புதிய வைரஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.