Publish Date: Fri, 23 Oct 2020 (16:10 IST)
Updated Date: Fri, 23 Oct 2020 (16:40 IST)
மதுரை அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட செங்குளம் பகுதியில் சிவகாசியை சேர்ந்த சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதை ஆமத்தூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வெடி தயாரிப்பின் போது மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வால் விபத்து நடந்துள்ளது. இதில் ஆலையின் மூன்று அறைகள் முற்றிலுமாக உடைந்து சேதமாகின.
விபத்தின் போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆலையில் ஏற்பட்ட தீயை மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் பணியையும் தீயணைப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.