Publish Date: Wed, 21 Dec 2016 (11:24 IST)
Updated Date: Wed, 21 Dec 2016 (16:56 IST)
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் புறநகரான துல்டெப்க் பகுதியில் பட்டாசு விற்பனை செய்யும் மார்க்கெட் உள்ளது. இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தற்போது கிரிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வர இருப்பதால் அங்கு ஏராளமான ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 2.50 மணி அளவில் (இந்திய நேரப்படி இரவு 8.50) பட்டாசு கடையில் திடீரென தீப்பிடித்தது.
தீ மளமளவென பரவி, மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தீப்பிடித்தது. இதனால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.
தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. இருந்தும் தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியாகினர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.