Publish Date: Fri, 31 Jan 2020 (11:50 IST)
Updated Date: Fri, 31 Jan 2020 (11:54 IST)
இந்திய பொருளாதாரத்தை மீட்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்தது. மேலும் உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் குறைந்து போனது. இதன் விளைவாக ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியை கண்டது.
இதனால் பலரும் வேலை இழந்தனர். இந்த மந்தநிலையை குறித்து எதிர்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் ஆளும் அரசை கடுமையாக சாடினர். இந்நிலையில் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த பிரதமர் மோடி, “மத்திய பட்ஜெட் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாக இருக்கும்” என கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் வரிச் சலுகைகளை உயர்வு, விவசாயத்திற்கு அதிக நிதியை ஒதுக்குதல் போன்றவற்றை மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.