Publish Date: Fri, 31 Jan 2020 (09:30 IST)
Updated Date: Fri, 31 Jan 2020 (08:54 IST)
தமிழக பாஜக பிரமுகர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு ஒன்று நடிகை கௌதமி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
சமீபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது மாளிகையில் குடியரசு தினவிழாவையொட்டி தேநீர் விருந்து ஒன்று அளித்தார். இந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதற்கான அழைப்பிதழ் மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பதும் தமிழக பாஜக தலைவர்கள் யாருக்கும் இந்த அழைத்து கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்த அழைப்பு எப்படியோ நடிகை கெளதமிக்கு கிடைத்துள்ளதை அறிந்து தமிழக பாஜக பிரமுகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் நடிகை கௌதமி கலந்துகொண்டது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்த தமிழக பாஜக பிரமுகர்கள் நமக்கு கிடைக்காத வாய்ப்பு இவருக்கு எப்படி கிடைத்தது? என்று ஆச்சரியத்தில் இன்னும் மூழ்கியுள்ளனர்
இதுகுறித்து பாஜக பிரமுகர்கள் சிலர் கூறியபோது தமிழகத்தைச் சேர்ந்த பெண் மத்திய அமைச்சர் ஒருவர் கௌதமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவருடைய பரிந்துரையால் தான் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும் என்றும் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் தமிழக பாஜக தலைவர் நியமனம் செய்யப்பட்டதும் கெளதமிக்கு பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வரும் நிலையில் கௌதமிக்கு இந்த பதவி கொடுத்தால் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது