Publish Date: Thu, 05 Jul 2018 (21:59 IST)
Updated Date: Thu, 05 Jul 2018 (22:00 IST)
சமிபத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு கருப்புக்கொடி காட்டிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'மோடி கோ பேக்' என்று முழங்கினர். இது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'பிரதமர் மோடியை 'கோ பேக்' என்று கூறியவர்கள் விரைவில் 'கம் பேக்' என்று கூறுவார்கள் என்று தெரிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த பிரமருக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஒன்று தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழிசை செளந்திரராஜன் பேசியதாவது:
தமிழகத்திற்கு மத்திய அரசு நல்ல திட்டங்களை கொண்டு வருவதால் அரசியல்வாதிகளுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் மு.க.ஸ்டாலின் பின்னாளில் வருத்தப்படுவார். பாகிஸ்தான்காரர்களை ஓட ஓட விரட்டிய மோடி, தமிழக சாலையில் பயணிக்க பயப்படுவாரா? தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று ஒரு சில பேர் நம்பிக்கையுடன் கூறினார்கள். ஆனால் வைகோ ஸ்டாலினுடன் சேர்ந்துள்ளதால் அது நிச்சயம் நடக்காது.
தமிழகத்திற்கு வந்த மோடி, விதவிதமான இராணுவ விமானங்களை பறக்க விட்டார். ஆனால் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர்கள் கருப்பு பலூனை பறக்க விட்டனர். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததை பாஜக தவிர யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. பிரதம்ரை 'கோ பேக் மோடி' என சொன்ன தமிழகம் விரைவில் 'கம் பேக் மோடி' என சொல்லும் காலம் விரைவில் வரும்' என்று தமிழிசை பேசினார்