Publish Date: Wed, 27 Mar 2019 (23:18 IST)
Updated Date: Wed, 27 Mar 2019 (23:19 IST)
ஒவ்வொரு வாக்காளர்களும் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. அதேபோல் வாக்காளர்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்று தங்கள் வாக்குகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகிறது.
ஒரு வாக்காளர் தனது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்கிறதா? என்ற கேள்வியை திருவாளர் வெகுஜனம் கேட்டு வருகின்றார். ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்து வைத்துள்ள வேட்பாளர்கள் பலர் தங்களுக்கு வெறும் ஒரு கோடி, இரண்டு கோடி மட்டுமே சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்களே, இதனை தேர்தல் அதிகாரிகள் சரிபார்த்தார்களா? வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் தவிர வேறு சொத்துக்கள் அந்த வேட்பாளருக்கு இருந்தால் அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் இதுபோன்று போலியான சொத்துக்கணக்கை காட்ட யாராவது முன்வருவார்களா?
ஒரு வேட்பாளர் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்ற கணக்கு உள்ளது. ஆனால் ஒரு அரசியல் கட்சி வேட்பாளராவது அந்த தொகைக்குள் செலவு செய்த சரித்திரம் உண்டா? இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதா?
ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் வியாபாரிகளும், அப்பாவிகளும் கொண்டு செல்லும் பணத்தை பறந்து பறந்து பறிமுதல் செய்யும் பறக்கும் படையினர் கோடிக்கணக்கில் கடத்தும் அரசியல் பிரமுகர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
மேற்கண்ட கேள்விகள் எல்லாம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி தன்னுடைய கடமையை 100% செய்துவிட்டு அதன் பின்னர் வாக்காளர்களுக்கு அறிவுரை கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
நல்ல வேட்பாளர்கள் போட்டியிட்டால் கண்டிப்பாக இந்தியாவில் 100% வாக்குப்பதிவு நடக்கும். ஆனால் வேட்பாளர்கள் மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதால்தான் யாருக்கும் ஓட்டு போட வேண்டும் என்ற மனநிலை ஏற்படுவதில்லை.