Publish Date: Sun, 08 Apr 2018 (16:55 IST)
Updated Date: Sun, 08 Apr 2018 (17:02 IST)
காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் மத்திய அரசு இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருக்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களின் ஒரு பகுதியாக காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை திருச்சியில் உள்ள முக்கொம்பில் நேற்று ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இன்று, தஞ்சாவூரில் 2 ஆவது நாளாக காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வாண்டையர் குடியிருப்பு வரை இன்று நடைபயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் மக்களிடையே பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா சர்வாதிகாரியாக இருந்தாலும் அவரை கண்டு மத்திய அரசு பயந்து கொண்டு தான் இருந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்திருந்தால் மத்திய அரசு காவிரி பிரச்சினையில் இப்படிப்பட்ட முடிவு எடுத்து இருக்குமா? எனக் கேட்டார்.
ஆனால் எடிப்பாடி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சி காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கிறது என்றார். மேலும் காவிரி விவகாரத்தில் எங்கள் மீது என்ன வழக்கு தொடர்ந்தாலும், என்ன தண்டனை கொடுத்தாலும் அதனை ஏற்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.