Publish Date: Tue, 29 May 2018 (09:30 IST)
Updated Date: Tue, 29 May 2018 (09:33 IST)
திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பீடான நகைகள் கொள்ளையில் வங்கியின் நிர்வாக உதவியாளர் விஸ்வநாதன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில், ஒரு கட்டிடத்தின் 2வது மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 5000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கம்போல் பணியாற்றி முடிந்து வங்கியைப் பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கள் கிழமையான நேற்று வங்கியை திறந்து பார்த்தபோது வங்கி லாக்கர் திறக்கப்பட்டு 6 கோடி மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வங்கியின் பூட்டு உடைக்கப்படவில்லை, நகை லாக்கரும் உடைக்கப்படவில்லை. வங்கி லாக்கரில் இருந்த 25 லட்சம் ரூபாய் பணமும் திருடப்படவில்லை. ஆனால், கள்ளச்சாவி போட்டு பீரோ திறக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வங்கியின் நிர்வாக உதவியாளர் விஸ்வநாதன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து நகைகளை மீட்ட போலீஸார் விஸ்வநாதன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.