Publish Date: Sat, 10 Mar 2018 (15:16 IST)
Updated Date: Sat, 10 Mar 2018 (15:18 IST)
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரிக்கு வருகே மாணவி அஸ்வினி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 2.45 மணியளவில் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வரும் அஸ்வினி என்கிற மாணவியை, அழகேசன் என்ற வாலிபர் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தார். அவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அஸ்வினி மரணமடைந்தார்.
பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அழகேசன் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் செய்தியாக வெளியாகியுள்ளது. முதலில், அஸ்வினி உயிரோடு இருக்கிறாளா என அழகேசன் கேட்டுள்ளார். அவர் இறந்து விட்டார் என போலீசார் கூற, அழகேசன் கதறி அழுதாராம். அதன் பின் அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நான் மதுரைவாயலில் அஸ்வினியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தேன். வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தேன். அப்போது, அஸ்வினியின் வீட்டிற்கு தண்ணீர் கேன் போட சொன்ற போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அஸ்வினிதான் என்னிடம் முதலில் காதலை கூறினார். ஆனால், நான் உனக்கு பொருத்தமானவர் இல்லை என மறுத்தேன். ஆனால், உன்னையே திருமணம் செய்துகொள்வேன். எந்த சூழ்நிலையிலும் மனம் மாறமாட்டேன் என சத்தியம் செய்தார்.
எனவே, நானும் அவரை காதலிக்கத் தொடங்கினேன். ஆனால், இது பிடிக்காத அவரின் தாய் போலீசாரிடம் புகார் கொடுத்து என்னை அசிங்கப்படுத்தினார். மேலும், அஸ்வினியின் மனதையும் மாற்றிவிட்டார். எனவேதான் ஆத்திரத்தில் அஸ்வினியை கொலை செய்ய முடிவெடுத்தேன். கத்தியால் குத்தி அவள் சாகவில்லை எனில், சீமெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்துதான் அங்கு வந்தேன்.
அஸ்வினி என்னிடம் பேசாமல் சென்றார். என் பேச்சை அவர் காது கொடுத்து கேட்கவில்லை. என்ன மறந்து விடு என உறுதியாக கூறினார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். எனவே, கத்தியால் அவர் உடலில் பல இடங்களில் குத்தினேன். மேலும், கழுத்தை அறுத்தேன். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். அதன்பின், நான் தீக்குச்சியை என் மீது பற்ற வைக்க முயன்ற போது தீப்பெட்டி கீழே விழுந்துவிட்டது. அதற்குள் பொதுமக்கள் என்னை பிடித்து அடித்து உதைத்து என் கையை கட்டிப் போட்டு விட்டனர்” என வாக்குமூலத்தில் கூறியுள்ளாராம்.