தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக குணச்சித்திர மற்றும் வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் வடிவுக்கரசி. சிவப்பு ரோஜாக்கள் படம் மூலமாக அறிமுகமான இவர் அதன் பின்னர் வித்தியாசமான வேடங்களில் நடித்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் நிலைத்து நின்று வருகிறார். சமீபத்தில் அவருக்கு திரையுலகினர் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தினர்.
இந்நிலையில் தற்போது அவர் சினிமா மற்றும் சீரியலில் நடிகர்களுக்குப் பதிலாக இயக்குனர் சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை நடிக்க வைப்பது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “ இப்போது இயக்குனர்கள் எல்லாம் இன்ப்ளூயன்சர்களை நடிக்க வைக்கிறார்கள். கேட்டால் அவர்களுக்கு பாலோயர்ஸ் இருக்கு என்கிறார்கள்.
அவர்கள் ஏற்கனவே நடிகர்கள் நடித்த பாடல்களை, காட்சிகளை வாயசைத்து வீடியோவாகப் போட்டு பிரபலம் ஆனவர்கள். ஆனால் அவர்கள் நடிக்க வரும் போது வசனம் பேச முடியாமல் திணறுகிறார்கள். அதனால் அனைவரின் நேரமும் வீணாகிறது.” எனக் கூறியுள்ளார்.