சின்னத்திரை நடிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர போவதாகத் தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர், சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ₹20 லட்சம் வரை பணமும் நகைகளும் பெற்று ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரெகானா திருமணம் ஆகி, கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் ராஜ் கண்ணன் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை செய்ய, ராஜ் கண்ணன், ரெகானா பேகம் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ராஜ் கண்ணன் ஆஜரான நிலையில், ரெகானா பேகம் வரவில்லை.
இதனை அடுத்து, தொழிலதிபர் ராஜ் கண்ணன், "தான் நீதிமன்றத்தில் இதை பார்த்து கொள்வதாக" கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "என்னை திருமணம் செய்வதாக ரெகானா பேகம் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். என்னை போலவே கோவையை சேர்ந்த ஒருவரையும் அவர் ஏமாற்றியுள்ளார். எனவே, நடிகை ரெகானா பேகத்தின் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர போகிறேன்," என்று கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.