மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குட்னைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக டூரிஸ்ட் பேமிலி படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளியாகி திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. அதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகி ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.
இந்நிலையில் ஓடிடியில் ரிலீஸானாலும் டூரிஸ்ட் பேமிலி படம் இன்னமும் 85 திரைகளில் ஓடிக் கொண்டிருப்பதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படம் திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக டூரிஸ்ட் பேமிலி படம் அமைந்துள்ளது.