சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதனால் உடனடியாக ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் சூர்யா உள்ளார்.
அதன் காரணமாகக் குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கட் அட்லூரியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயிமெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் இந்தப் படம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இசையமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷும், இயக்குனர் வெங்கட்டும் துபாய்க்கு சென்றுள்ளனர். சூர்யா ஆர் ஜே பாலாஜி படத்தை முடித்து விட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக இந்தப் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.