ரவி மோகன் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க, கராத்தே பாபு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படமாக டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ப்ரோகோட் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரங்களில் எஸ் ஜே சூர்யா, அரவிந்த் அசோகன், ஸ்ரீநிதி ஷெட்டி, ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் ப்ரோகோட் என்ற பெயரி ஏற்கனவே இயங்கி வரும் மதுபான நிறுவனம் தங்கள் ப்ராண்டின் பெயரை படத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றது. அதையெதிர்த்து ரவி மோகன் ஸ்டுடியோஸ் டெல்லி உயரீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை ஏற்று விசாரித்த உயர் நீதிமன்றம் இடைகாலத் தடையை நீக்க மறுத்துவிட்டது. இதனால் படத்தின் தலைப்பு மாற்றப்படுமா அல்லது உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.