தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். கடைசியாக அவர் இயக்கிய கூலி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கு முன்பாக அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு பீரியட் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கூலி படத்தில் கல்யாணி வேடத்தில் நடித்திருந்த ரச்சிதா ராம் அவருக்குக் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தில் ஏஜண்ட் டீனா கதாபாத்திரம் வைரல் ஆனதைப் போல கூலி படத்தில் கல்யாணி பாத்திரம் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. அதனால் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.