தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.
அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. ஒரு திருப்புமுனைப் படத்துக்காக அவர் காத்திருக்கிறார்.
இந்நிலையில் பிரபுதேவா தன்னுடைய வெற்றி நகைச்சுவைக் கூட்டணியான பிரபுதேவா மற்றும் வடிவேலு ஆகியோர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை சாம் ரோட்ரிக்யூஸ் இயக்குகிறார். துபாயைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பூஜை துபாயில் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக சொலப்பட்டது. ஆனால் தற்போது திடீரென இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பேசியுள்ள சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் “தயாரிப்பாளர் கண்ணன் ரவி தமிழ் சினிமா பற்றி நன்கு கரைத்துக் குடித்தவராக உள்ளார். அதனால் முடிவுகளை ஆழ்ந்து யோசித்து எடுக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.