மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள தக் லைஃப் படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்காக தென்னிந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன்.
இதன் ஒரு கட்டமாக பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தக்லைஃப் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கமல் ““இந்த நிகழ்ச்சிக்கு சிவராஜ்குமார் வந்திருக்கிறார். அவர் கர்நாடகாவில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் என் பேச்சைத் தொடங்கும்போது தமிழில் பேசினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.” எனப் பேசியிருந்தார்.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமல்ஹாசனின் கருத்தை எதிர்த்து கர்நாடகாவைச் சேர்ந்த சில அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே போல சமூகவலைதளங்களிலும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கமல், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து கேரளாவில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது விளக்கமளித்துள்ளார் கமல், அதில் “எனக்கு மொழி வரலாற்று அறிஞர்கள் சொல்லிக் கொடுத்ததைதான் நான் கூறினேன். சர்ச்சைகளையும், கமல்ஹாசனையும், தக் லைஃப் படத்தையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். நான் உட்பட எந்த அரசியல்வாதிக்கும் மொழிப் பற்றிப் பேச போதுமான தகுதி கிடையாது. இதுபற்றிய விவாதத்தை வரலாற்று அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுவோம். அன்பு எப்போதும் மன்னிப்புக் கேட்காது” எனக் கூறியுள்ளார்.