சென்னை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதியக் குறைப்புக்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கவில்லை. மேலும் அது சம்மந்தமாகப் பேசிய அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டவர்கள் மிகவும் ஆணவத்துடன் பேசி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.
இது சம்மந்தமாக ஆளும் கட்சி தொழிலாளர்களின் கோரிக்கையை செவிமடுத்துக் கேட்கவேண்டுமென அதன் கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ தொழிலாளர்களை சந்தித்துப் பேசவேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வெளியாகும் ரஜினிகாந்தின் கூலி படத்தை நேற்று சிறப்புக் காட்சியில் பார்த்துப் படக்குழுவைப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் வெளியாக, இணையத்தில் விமர்சனங்களும் கண்டனங்களும் முதல்வர் மேல் எழுந்து வருகின்றன.