மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான தக் லைஃப் படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த அடியை சந்தித்தது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததற்காக மணிரத்னம் வருத்தம் தெரிவித்ததாக தகவல் பரவியது.
அதில் “"எங்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு 'நாயகன்' படம் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, நாங்கள் வருந்துகிறோம் என்பதை மட்டுமே சொல்ல முடியும். ஏனென்றால், 'நாயகன்' போன்ற ஒரு படத்தைத் திரும்பவும் எடுக்கும் எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. நாங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக் களத்தில் பயணிக்க விரும்பினோம். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோ வேறு திசையில் இருந்தன. நாங்கள் கொடுத்த படத்துக்கும், அவர்கள் எதிர்பார்த்ததற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. இதன் காரணமாகவே 'தக்லைஃப்' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை” எனக் கூறியதாக சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் “மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படிப் பரவும் தகவல் உண்மையில்லை” எனக் கூறியுள்ளார்.