யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது.
இரண்டாவது படத்தில் அவர் சிவகார்த்திகேயன் என்ற மாஸ் ஹீரோவுக்காக சமாதானங்கள் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை மாவீரன் படத்தைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பாக அருண் விஷ்வா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் படத்துக்கு வீரமே ஜெயம் எனத் தலைப்பு வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மடோன் இயக்கிய மாவீரன் திரைப்படத்தில் கேட்கும் அசரீரி குரல் அடிக்கடி வீரமே ஜெயம் என்ற வார்த்தையை சொல்லும். அது படம் ரிலீஸான போது கவனம் பெற்ற நிலையில் இப்போது அதே வார்த்தையை அடுத்த தலைப்பாக வைத்துள்ளதாக தெரிகிறது.