Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிமணி-கரு.நாகரஜன் விவகாரம்: நடிகை கஸ்தூரி கண்டனம்

ஜோதிமணி-கரு.நாகரஜன் விவகாரம்: நடிகை கஸ்தூரி கண்டனம்
, செவ்வாய், 19 மே 2020 (09:34 IST)
நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதத்தில் ஜோதிமணி, பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், உணர்ச்சிவசப்பட்ட பாஜகவின் கரு.நாகராஜன், ஜோதிமணியை தனிப்பட்ட வகையில் விமர்சனம் செய்தார். இந்த விவாதம் குறித்து காங்கிரஸ், பாஜகவினர் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களுடைய கருத்தை கூறி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கூறியதாவது:
 
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில், பாஜகவின் கரு நாகராஜன் அவர்கள் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி மீது தொடுத்த தனி மனித தாக்குதலை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பிரச்சினை பற்றிய விவாதத்தில், முதலில் செல்வி ஜோதிமணி பிரதமர் மோடியை தாக்கி, கல்லடி என்றெல்லாம் வன்சொற்களால் வரம்பு மீறி பேசினார். உண்மைதான். அதனால் உணர்ச்சிவசப்பட்ட கரு நாகராஜன் அவர்கள், வார்த்தையை கொட்டிவிட்டார். "என்னமா, கேவலமா பேசறியே" என்று கேட்பதற்கும் " நீ கேவலமான பெண்'' என்பதற்கும் அபாயகரமான வித்தியாசம் உள்ளது. வார்த்தைகளை கொட்டிவிட்டால், பிறகு அள்ளவா முடியும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, பேச்சில் பிழை வந்துவிட்டால், உங்கள் வாதம் தோற்று விடுமே. இன்று தோற்றுதான் விட்டது. ஜோதிமணியின் கண்டனத்துக்குரிய சர்ச்சை பேச்சு மறந்து, நாகராஜன் அவர்களின் சொல் மட்டுமே நினைவில் நிற்கிறது.
 
இதற்கு அங்கேயே அப்பொழுதே திரு நாகராஜன் அவர்கள் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அப்போதே விளக்கம் அளித்து இருக்கவேண்டும். வாய் தவறி சொல்லிவிட்டேன், பெண்ணை சொல்லவில்லை, அவர் பேச்சை சொன்னேன்" என்று சொல்லியிருந்தால், ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நெறியாளர் நெல்சன் எடுத்து கூறியும், மற்ற பங்கேற்பாளர்கள் சொல்லியும் அவர் காதிலேயே போட்டு கொள்ளவில்லை. 
கொள்கைரீதியாக, அரசியல் ரீதியாக  எத்தனையோ கருத்து வேறுபாடு இருக்கலாம். அதை கருத்து ரீதியாக கையாள முடியாமல் கொச்சையாக பேசுவதா? யாராக இருந்தாலும் எவ்வளவு உணர்ச்சி வசபட்டாலும்  சபை நாகரிகத்தை மறக்க கூடாது, அதிலும் ஒரு பெண்ணை , அவரை பெண் என்ற விஷயத்தை வைத்தே சிறுமைப்படுத்துவது நம் நாட்டில் பல ஆண்களுக்கு உள்ள நோய். Coronavirus ஐ விட கடுமையான நோய். அந்த நோயால் திரு நாகராஜன் அவர்களும் பீடிக்கப்பட்டுள்ளார் என்று  தெரிகிறது. இந்த நோய் உள்ளவர்களை உடனடியாக அவர் கட்சி தலைமை 'quarantine ' செய்து,  நடவடிக்கை என்ற மருந்தை பயன்படுத்தினால், கட்சியின் மானம் சிறிதளவாவது தப்பிக்கும். சில மாதங்கள் முன்பு  வரை தமிழக பாஜகவின் தலைவியும் ஒரு ஆற்றல் மிக்க பெண்மணி என்பதை அதற்குள் பாஜகவினர் மறந்துவிட்டார்களா? இன்றைய நிகழ்வுக்கு பாஜக பெண் உறுப்பினர்களும் தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
 
எதிர்பாராத அதிர்ச்சிகரமான தாக்குதலை செல்வி ஜோதிமணி அவர்கள் தனக்கு சாதகமாக்கி கொண்டார். தனி மனித தாக்குதல் அவருக்கு புதிதல்ல; அதை தாண்டி வரும் வைராக்கியமும் மன வலிமையும் அவருக்கு அதிகமாகவே உண்டு. பொது வாழ்க்கையில் போராடிவரும் எத்தனையோ பெண்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் ஜோதிமணிக்கு என்னுடைய வாழ்த்துக்களும் ஆதரவும் எப்போதும் உண்டு. என்னோடு பலரும் உண்டு
 
இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாம் திருமணத்திற்கு ரெடியான ரேஷ்மா ? எதிர்பார்த்த பதிலை அவரே கூறிவிட்டார்