தனது கணவரை நடிகர் சந்தானம் கிண்டல் செய்தது குறித்து நடிகை தேவயானி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்து சந்தானம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார், இந்நிலையில் நடிகை தேவயானி, சந்தானம் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமா நடிகையான தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜகுமாரனும், சந்தானமும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் படத்தில் காமெடி காட்சி ஒன்றில் இணைந்து நடித்திருந்தார்கள். ஓடும் ரயிலில் சந்தானம், ராஜகுமாரனை கலாய்கும் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமடைந்தது.
அந்த காமெடி காட்சி குறித்து சமீபத்தில் பேசிய தேவயானி, தனது கணவரை சந்தானம் உருவக்கேலி செய்யும் விதமாகவும், வார்த்தைகளாலும் கிண்டல் பண்ணியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், அதனால் அந்த படத்தையே தான் பார்க்கவில்லை என்றும் பேசியிருந்தார்.
அதற்கு பதிலளித்து பேசியுள்ள சந்தானம், அந்த காமெடி காட்சிகளுக்கான வசனங்கள் அனைத்தும் ராஜகுமாரன் சாரிடம் காட்டி அவருக்கு ஓகே என்ற பிறகுதான் படமாக்கப்பட்டது என்றும், படத்தில் ஒருவரை நகைச்சுவைக்காக கிண்டல் செய்வதற்கும், உண்மை வாழ்க்கைக்கும் வித்தியாசம் உள்ளதாகவும், தனது சக காமெடியன்களை ஷூட்டிங் தாண்டி தான் மரியாதையுடனே அணுகுவதாகவும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K