ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களை தேர்வு செய்யாமல் வெறுமனே கவர்ச்சி பொம்மையாக வந்து செல்லும் பாத்திரங்களையே தேர்வு செய்தார்.
இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் சோஹைல் கட்டாரி என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கட்டாரி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதும், அவரின் முன்னாள் மனைவி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பது சர்ச்சிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளில் தற்போது அவர் தன்னுடைய கணவர் சோஹலைப் பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. கணவர் வீட்டில் இருந்து ஹன்சிகா வெளியேறி தனியாக வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இருவரிடம் இருந்தும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஹன்சிகா தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இது குறித்துப் பதிவு செய்த அவர் “இந்த ஆண்டு எனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. எனக்கேத் தெரியாமல் எனக்குள் இருந்த பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பிறந்தநாளில் பெறப்பட்ட வாழ்த்துகளால் என் இதயம் நிறைந்துள்ளது. எல்லோருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.