நடிகர் தனுஷுக்கு எதிராக பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
”ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு,
06.09.2024 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் (Five star creations LLP) பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு நடிகர் தனுஷ் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன், முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவுசெய்தேன்.
அதனை புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும் (முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, டான் பிக்சர்ஸ் (DAWN pictures) ஆகாஷ் தயாரிக்கும் "இட்லி கடை" படப்பிடிப்பு நடக்க வேண்டும், "மேலிடத்து உத்தரவு" என்று கூறியதை மறந்தீரோ?
மேலும், அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள். நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகிறேன்.
நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன? .தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. வட்டிக்கு பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள். தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிகையாளர்களிடம் கூற வேண்டாம், அக்டோபர் 30-ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று கதிரேசன் பிரச்னை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது.
மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே. நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை. தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே. எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி, பங்குதாரர், கலைச்செல்வி” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிக்கைக்கு தனுஷ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.