Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதிக்கட்டத்தில் தேர்தல் பரப்புரை... சூறாவளியாய் சுழன்றடித்த குஷ்பு...!

இறுதிக்கட்டத்தில் தேர்தல் பரப்புரை... சூறாவளியாய் சுழன்றடித்த குஷ்பு...!
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (23:54 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்று இரவு 7 மணியோடு நிறைவடைய உள்ளது. எனவே அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகையும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான குஷ்பு இறுதி நாளான இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
வேட்புமனு நாள் தாக்கல் செய்த நாளில் இருந்தே ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். குஷ்புவிற்கு ஆதரவாக அவருடைய கணவரும், பிரபல நடிகர், இயக்குநருமான சுந்தர் சியும் வீடு, வீடாக சென்று, துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் சில நாட்கள் மட்டுமே திறந்த வெளி ஜீப்பில் பயணம் செய்து வாக்கு சேகரித்து வந்த குஷ்பு, அதன் பின்னர் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் தடபுடலான வரவேற்பளித்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் குஷ்புவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதிலும்,  உரையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர், கல்வி, சாலை வசதிகள் ஆகிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக குஷ்பு வாக்குறுதி அளித்துள்ளார். குறிப்பாக ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தை பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்படும், இஸ்லாமிய பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்க கடனுதவி செய்து தரப்படும் போன்ற வாக்குறுதிகள் பெண் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
 
தினந்தோறும் ஆயிரம் விளக்கை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த குஷ்பு, இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் ஒட்டுமொத்த தொகுதியிலும் காலை முதலே பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். திறந்தவெளி ஜீப்பில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். தாமரைக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் மேற்கொண்டு வரும் குஷ்புவிற்கு வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ஆண்டு கழித்து திருமணம் செய்த நடிகை !