நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகி படிப்படியாக வெற்றிகள் கொடுத்து முன்னணி நடிகராக உருவாகியுள்ளார். சீதாராமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் துல்கர் சல்மான். அதனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகின்றன.
அதன் பின்னர் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய பேன் இந்தியா வெற்றியைப் பெற்றது. அதையடுத்துத் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டும், படங்களைத் தயாரித்துக் கொண்டும் இருக்கிறார். அவர் தயாரிப்பில் வெளியான லோகா திரைப்படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கலக்கியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து முறையின்றி வாங்கப்பட்ட அவரது சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்மந்தமாக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும் நீதிமன்றம் கார்களைத் திரும்பக் கொடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் தற்போது சென்னை கிரின் வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.