Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தவறான சிகிச்சையைப் பரிந்துரைத்து சர்ச்சையில் சிக்கிய சமந்தா?... ஒரு மருத்துவரின் விளக்கம்!

தவறான சிகிச்சையைப் பரிந்துரைத்து சர்ச்சையில் சிக்கிய சமந்தா?... ஒரு மருத்துவரின் விளக்கம்!

vinoth

, வெள்ளி, 5 ஜூலை 2024 (15:28 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில ஆண்டுகளாக மையோசிட்டீஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கடந்த காலத்தில் தான் ஆரோக்யமற்ற ஒரு உணவுப் பொருள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அவர் ஒரு சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார்.

அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு சமூகவலைதளப் பதிவில் தான் முகத்தில் நெபுலைசரை பொருத்திக்கொண்டிருக்கும் புகைப்படத்தோடு “வைரல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மாற்றுவழியாக ஹைரஜன் பெராக்ஸைட் மற்றும் டிஸ்டில்ட் தண்ணீர் ஆகியவற்றை நெபுலைஸ் செய்து பயன்படுத்துங்கள். நல்ல தீர்வு கிடைக்கிறது. தேவையற்ற மருந்துகளை எடுக்க வேண்டாம்” எனக் கூறியிருந்தார். இது குறித்து பல்வேறு விதமான கண்டனங்கள் சமந்தாவின் மேல் எழுந்துள்ளன. அவர் பரிந்துரைக்கும் சிகிச்சை உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று மருத்துவத்துறையில் உள்ள பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவரான அ. ஃபரூக் அப்துல்லா இதுகுறித்த விளக்கத்தை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “நடிகை சமந்தா ருத் பிரபு அவர்கள் இன்று இண்ஸ்டாகிராமில் நெபுலைசர் சிகிச்சை ஒன்று எடுப்பதைப் பற்றி பதிவு போட்டு அதை அனைவரையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறார். அவர் பரிந்துரைத்த சிகிச்சை தான் பிரச்சனை. ஹெ2ஓ2 எனும் ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தை நீருடன் கலந்து அதை நெபுலைசர் எனும் கருவியில் ஊற்றி புகையாக மாற்றி ஆவி பிடித்தால் பல சுவாசப்பாதை பிரச்சனைகள் குணமாகும்.

இது சூப்பர் சிகிச்சை.  மாத்திரை மருந்துகள் எடுப்பதை விட இது நல்ல சிகிச்சை என்றெல்லாம் எழுதியிருப்பது தான் பிரச்சனை. ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்பது தரை உள்ளிட்ட தளங்களை சுத்தம் செய்யப் பயன்படும் க்ளீனர்களில் கலந்துள்ள ரசாயனமாகும். இதை உபயோகப்படுத்தி இரும்புப் பிளேட்டுகளில் உள்ள கறைகளைக் கூட நீக்க முடியும் என்கிற அளவுக்கு சக்தி வாய்ந்தது. இந்த திரவத்தைப் பருகினாலோ நுகர்ந்தாலோ திசுக்களை அழிக்கும் அளவு சக்தி வாய்ந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதன் 3% திரவம் - சுவாசிக்கப்படும் போது சுவாசப்பாதை எரிச்சல் , ரசாயனத்தால் ஏற்படும் தீவிர நுரையீரல் அழற்சியை ( INHALATIONAL CHEMICAL PNEUMONITIS)  ஏற்படுத்தும்.

ஆஸ்துமா நோயாளிகளோ நீண்ட நாள் சுவாசப்பாதை அழற்சி நோய் கொண்டவர்களோ சைனஸ் பிரச்சனை கொண்டவர்களோ இது போன்ற ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசர் போன்ற விஷப்பரீட்சைகளை முயன்று பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.  உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின்றி வேறு யார் பரிந்துரைப்பதையும் ஏற்காதீர்கள்.  சிந்தித்து அறிவு பெற்று பிறகு முயற்சி செய்யுங்கள்.  அதுவே சிறந்தது


சமந்தா அவர்கள் பிரபலமாக இருப்பதால் அவரது இது போன்ற கருத்துகளை பல கோடி மக்கள் காண்பர். இதில் சில லட்சம் பேர் அதை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு.  இது போன்ற விஷப்பரீட்சைகளை உங்களுக்கோ உங்களின் குழந்தைகளுக்கோ பெற்றோர்களுக்கோ முயற்சி செய்து பார்க்காதீர்கள்.  நுரையீரல் போன்ற நுண்ணிய சவ்வு மற்றும் திசுக்கள் இருக்கும் பகுதியில் இது போன்ற தீவிரமான ரசாயனத்தை உள்செலுத்தினால் நிரந்தரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

நடிகர்கள், கலை, விளையாட்டு, இலக்கியம் போன்ற பல்துறை விற்பன்னர்கள் அவரவர் துறையின் செய்திகளை தகவல்களை வெளியிட்டால் நல்லது. அதை விடுத்து மருத்துவ அறிவியல் பூர்வமில்லாத சான்றுகள் மற்றும் ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபணமாகாத மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகள் / கருத்துகளைக் கூறுவது அவர்களை பின்பற்றும் பல லட்சம் பேரை தவறான வழிக்கு இட்டுச் சென்று விடும் ஆபத்தான போக்காகும். இதை அவர்கள் கைவிட வேண்டும். யார் என்ன கூறினாலும் அவரவருக்கு மூளையும் அறிவும் கல்வியும் சிந்திக்கும் ஆற்றலும் நிறையவே வழங்கப்பட்டுள்ளது

எதைச் செய்தாலும் அது யாரைப் பார்த்து செய்தாலும் இறுதியில் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை நாம் தான் அனுபவிக்கப் போகிறோம் என்பதால் எதையும் சிந்தித்து ஆராய்ந்து நம்புவது நல்லது.  இந்த விசயத்தில் சமந்தா கூறியிருக்கும் சிகிச்சை அறிவியல் ஆதாரப்பூர்வமற்றது என்பதால் இதை புறந்தள்ளுவோம்.” என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!