தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார். 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். இந்த படம் தனுஷுக்கு இந்தியில் ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.
இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, சோனம் கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது. தற்போது இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரி ரிலீஸ செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் AI தொழில்நுட்பம் மூலமாக க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதற்கு இயக்குனர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது தனுஷும் அதை விமர்சித்துள்ளார். இது சம்மந்தமான தன்னுடைய பதிவில் “ AI மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த படம் என்னைத் தொந்தரவு செய்துவிட்டது. நான் ஒத்துக்கொண்டு நடித்த ராஞ்சனா இது இல்லை. இது சம்மந்தமாக நான் தெரிவித்த கருத்தை மீறி இதை செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படும் மாற்றங்கள் சினிமாவை அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இது சம்மந்தமான வழிகாட்டுதல்கள் தேவை” என அதிருப்தியை தெரிவித்துள்ளார்.