அறம் படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் கோபி நயினார் இப்போது ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி என்ற படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே அறையில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
மனித உரிமை மீறல்கள் குறித்த கதையாக இந்த படத்தை கோபி உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் சென்சாருக்கு சென்ற நிலையில் அங்குள்ள அதிகாரிகள் பல காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் “படத்தை சென்சார் செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கவேண்டும்” என்றும் சுதந்திர வரம்புக்குட்படாதக் காட்சிகளை நீக்க சம்மதம்” என்றும் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்சார் போர்டு இது சம்மந்தமாக பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று நடந்த அடுத்தகட்ட விசாரணையின் போது “மனுசி படத்தை மீண்டும் மறு ஆய்வு செய்து ஆட்சேபத்துக்குரியக் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து மனுதாராருக்கு தகவல் தெரிவிக்கிறோம். அதை அவர்கள் நீக்க சம்மதிக்கும் பட்சத்தில் என்ன சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.