பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர், தேவ் டி உள்ளிட்ட படங்கள் பெரியளவில் கவனம் பெற்ற படைப்புகளாக அமைந்தன.
சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் லியோ மற்றும் மகாராஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் அவர் நடித்த ரைபிள் கிளப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு அங்கே பெரியளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் பாலிவுட்டின் அதீத விளம்பர மோகம் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் “மக்கள் நல்ல கதைகளைத் தேடுகிறார்கள். அதனால்தான் f1 படம் இந்தியாவில் ஓடுகிறது. அதை விளம்பரப்படுத்த பிராட் பிட் இந்தியா வந்தாரா?. விளம்பரம் என்பது முக்கியம்தான். ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் நகர் முழுவதும் விளம்பரங்களை வைக்கிறார்கள். இதில் சிறிய படங்கள் அடிபட்டு போகின்றன. விளம்பரம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் கதை சுவாரஸ்யமாக இருந்தால்தான் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது. கதை நன்றாக இருந்தால் மக்களே அதை விளம்பரப்படுத்துவார்கள்” எனக் கூறியுள்ளார்.