தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார். 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் நவம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தனுஷ் “ஏன் தொடர்ந்து என்னை இதுபோன்ற காதல் தோல்வி இளைஞன் கதாபாத்திரத்திற்கே அழைக்கிறீர்கள் என இயக்குனரிடம் கேட்டேன். அதற்கு அவர் உன் முகம் அதற்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது எனக் கூறினார். அதன் பின்னர் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். ஆனந்தின் வார்த்தைகளை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.