விஜயகாந்தின் இறப்பு இன்னும் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷன் கடவுள்பா, வாரி வாரி கொடுப்பாருப்பா, வயிறார சாப்பாடு போடுவாருப்பா என்றுதான் பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அவரை திட்டி யாரும் இதுவரை பேசுனதே இல்லை. ஆனால் விஜயகாந்த் மீது இப்படியும் ஒரு வன்மமா என்று கேட்கும் அளவுக்கு வடிவேலுவின் பேச்சு இருந்தது.
வடிவேலு அரசியலுக்கு வந்த பிறகு திமுகவிற்கு ஆதரவாக இறங்கி விஜயகாந்தை எதிர்த்து பேசக் கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசி பலரின் கோபத்திற்கு ஆளானார். ஆனால் அப்போது கூட விஜயகாந்த் வடிவேலுவை ஒன்னும் சொல்லாதீங்க, அரசியலில் இப்படித்தான் இருக்கும் என்று கூறினார். இன்னொரு பக்கம் ஜெயலலிதாவையும் விட்டு வைக்கவில்லை வடிவேலு.
விளைவு சினிமாவில் இருந்து விலகும் சூழ் நிலை ஏற்பட்டது. அதிலிருந்தே கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு மெல்ல மெல்ல தலைகாட்டினார். அதில் மாமன்னன் திரைப்படம் அவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. குணச்சித்திர கேரக்டரில் நடித்து கலக்கினார். உதய நிதிக்கு அப்பாவாக தன்னுடைய அபார நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஆனால் காமெடி அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் குணச்சித்திர கேரக்டரிலேயே நடித்து வருகிறார். இந்த நிலையில் கேப்டன் இறப்புக்கு வடிவேலு வரவில்லை. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ஒரு கட்டத்திற்கு பிறகு வடிவேலுவின் கெரியரை தூக்கி விட்டதற்கு காரணமாக இருந்தவர் விஜயகாந்த். அதனால் கண்டிப்பாக அந்த நன்றியை மறக்கமாட்டார். நிச்சயமாக வருவார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் வடிவேலு வரவே இல்லை.
அதற்கும் பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இப்போது அதை பற்றி வடிவேலுவே மனம் திறந்திருக்கிறார். மாரீசன் படத்தில் வடிவேலுவுக்கு மகனாக நடித்த ஹார்ட் பீட் சீரியஸ் குரு லஷ்மணன் கூறும் போது படப்பிடிப்பு போக ஓய்வு நேரத்தில் குரு லஷ்மணன் வடிவேலுவிடம் பேசி கொண்டிருந்தாராம். அப்போது எதேச்சையாக விஜயகாந்த் பற்றியும் பேச நேர்ந்திருக்கிறது. உடனே வடிவேலு அமைதியாகிவிட்டாராம்.
டக்குனு மனுஷன் இறந்ததுக்கு கூட என்னால போக முடியல. நான் போய் இருக்கலாம். போயிருந்தாலும் அவரை இவ்வளவு திட்டிட்டு எதுக்கு வந்தான்னு தான் கேட்பாங்க. ஆனா மனசார சொல்றேன். அவர் சொர்க்கத்துலதான் இருப்பாரு என கூறினாராம் வடிவேலு. குரு லஷ்மணனும் மதுரைக்காரர் என்பதால் மனம் விட்டு பேசியிருக்கிறார் வடிவேலு.