தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர் ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இது சம்மந்தமாக ரஹ்மான் மீது சில அவதூறுகள் வீசப்பட்டன. அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் அதிகப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அவர் “நான் இந்து, கிருத்துவம் மற்றும் இஸ்லாம் என அனைத்து மதங்கள் குறித்தும் ஆழமாகப் படித்து வருகிறேன். ஆனால் மதத்தின் பெயரால் பிறருக்குத் தீங்கு விளைவிப்பது, கொல்வது போன்றதுதான் எனக்கு ஒரே பிரச்சனையாக உள்ளது.
நான் மற்றவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். என் இசைக் கச்சேரிகளில், பல மதத்தவர்கள், பல மொழியினர் வருகை தருகிறார்கள். நாம் அனைவரும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம். பல மொழிகளைப் பேசலாம். ஆனால் அதைத் தாண்டி நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்முடைய நற்செயல்களால்தான் மனிதகுலம் பயனடைகிறது.” எனக் கூறியுள்ளார்.