Publish Date: Fri, 28 Sep 2018 (15:53 IST)
Updated Date: Fri, 28 Sep 2018 (19:35 IST)
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறாரக்ள். இந்நிலையில், பக்தியில் பாலினப் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறி, பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கஸ்தூரி பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கஸ்தூரி கூறுகையில், "உலகம் முழுவதும் ஐயப்பன் கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பெண்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். சபரிமலையில் மட்டும்தான் பெண்களை அனுமதிக்கவில்லை. எல்லா இடங்களிலும் ஐயப்பன் தானே இருக்கிறார்? அப்புறம் ஏன் இந்தப் பாகுபாடு?
உச்ச நீதிமன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னுடைய கேள்வி, பெண்களால் 48 நாட்கள் விரதம் இருந்து கோயிலுக்கு வரமுடியுமா? நிச்சயம் முடியாது. அப்படியானால், அவர்கள் எத்தனை நாட்களுக்கு விரதம் இருந்தால் போதும் என்ற விதி வகுக்கப்பட வேண்டும்.
அப்புறம், அடுத்ததாக கோயிலுக்கு வரும் பெண்களின் உடை குறித்தும் கலாச்சாரக் காவலர்கள் வருத்தப்படுவார்கள். எனவே, உடை குறித்தும் வரைமுறைகள் வகுக்க வேண்டும். மற்ற ஐயப்பன் கோயில்களுக்குச் செல்வது போல, புடவை, சல்வார் கமீஸ், பேண்ட் - சட்டை அணிந்து வரவும் அனுமதிக்க வேண்டும்” என்றார்.